83 நாட்களில் 1000 பதிவுகள்!

Wednesday, May 9, 2007

விமர்சனப் போட்டி அறிவிப்பு

சற்றுமுன்... ஆயிரம் பதிவுகளை எட்டுவதை முன்னிட்டு மாபெரும் போட்டியை நடத்துகிறது. இது ஒரு செய்தி விமர்சனக் கட்டுரைப் போட்டி.

போட்டிக்கான செய்திக்கட்டுரைகளின் வகைகள்:-

அரசியல்

சமூகம்

அறிவியல் /நுட்பம்

விளையாட்டு

பொருளாதாரம்/வணிகம்

மேற்கண்டவற்றில் எந்த வகையின் கீழூம் செய்திகளின் அடிப்படையில் பின்னப்பட்ட கட்டுரைகள் போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப்படும் .

செய்திக்கட்டுரைகளின் விபரம்:-

நடப்புச் செய்திகளையோ அல்லது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளையோ தொகுத்து முடிவுகளை எட்டும் கட்டுரைகளை வரையலாம்.

ஒரு தலைப்பின் கீழ் சில செய்திகளைத் தொகுத்து முடிவுகளைத் தரலாம். எடுத்துக்காட்டுக்கு, 'பெண்ணியம் ' எனும் தலைப்பின் கீழ் செய்திகள் , புள்ளிவிபரங்களைக் கொண்டு கட்டுரை வரையலாம். நானோ நுட்பம் (Nanotechnology) குறித்த செய்திக் கட்டுரை எழுதலாம்.

ஏற்கனவே வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் எதிர்காலம் பற்றிய கட்டுரைகள் வரையலாம்.

செய்திகளை நையாண்டி செய்யும் கட்டுரைகளும் வரவேற்கப்படுகின்றன.

பரிசுகள் :

மொத்தபரிசுகள்: -

1. மொத்தத்தில் முதல் பரிசு ரூ . 1500/- மதிப்புள்ள புத்தகங்கள்

2. மொத்தத்தில் இரண்டாம் பரிசு ரூ . 1000/- மதிப்புள்ள புத்தகங்கள்.

3. மொத்தத்தில் மூன்றாம் பரிசு ரூ . 500/- மதிப்புள்ள புத்தகங்கள்.

ஒவ்வொரு வகைப்பாட்டின் கீழும் பரிசுகள் :-

இதன் கீழ் மொத்தம் 15 பரிசுகள், ஒவ்வொன்றும், ரூ.500/- மதிப்புள்ள புத்தகங்கள். அதாவது கீழுள்ள ஒவ்வொரு வகைப்பாட்டிற்கும் மூன்று சமமான பரிசுகள்

அரசியல்

சமூகம்

அறிவியல் /நுட்பம்

விளையாட்டு

பொருளாதாரம் /வணிகம்

வித்தியாசமான கட்டுரைக்கான பரிசுகள்:-

வசீகரமான, வித்தியாசமான தலைப்புள்ள கட்டுரைக்கு ரூ. 500/- பரிசு (இது வலைப்பதிவர்களுக்கு மட்டுமான பரிசு)

சிறப்பு பரிசுகள் :-

போட்டிக்கு முதலில் சமர்ப்பிக்கப்பட்டு தகுதி பெறும் கட்டுரைகளுக்கு சிறப்பு பரிசுகள் உண்டு .

பரிசுகளில் உங்களின் விருப்பம்:-

வெற்றி பெற்றவர் விரும்பினால் பரிசுத் தொகையைத் தான் விரும்பும் ( அல்லது சற்றுமுன் தேர்ந்தெடுக்கும்) ஒரு சமூக சேவைக்கு வெற்றி பெற்றவரின் பெயரில் அனுப்பி வைக்கப்படும் .

கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி :

பதிவர்கள் தங்கள் பதிவுகளில் பதித்துவிட்டு satrumun@gmail.com ற்கு சுட்டியை மின்னஞ்சல் செய்யலாம் .

அல்லது இந்த பதிவில் பின்னூட்டமாகத் தரலாம்.

எந்தப் பிரிவின் கீழ் கட்டுரை சேர்க்கப்பட வேண்டும் என்பதை ஆசிரியரே குறிப்பிடவேன்டும். இப்படிக் குறிப்பிடப்படாத கட்டுரைகளுக்கு சற்றுமுன் குழுவே பிரிவைத் தேர்ந்தெடுக்கும் .

பதிவர் அல்லாதவர்களும் முடிந்தவரை தமிழ் ஒருங்குறியில் தட்டச்சு செய்து மேலே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம். ஒருங்குறியில் எழுத இயலாதவர்கள் மட்டும் பிற எழுத்துருக்களிலும் அனுப்பலாம்.

கட்டுரைகளை அனுப்ப கடைசி நாள் : ஜூன் 10, 2007

சில விதிமுறைகள் :

போட்டிக்கு அனுப்பப்படும் கட்டுரைகளை போட்டியில் சேர்த்துக் கொள்வது சற்றுமுன் குழுவின் முடிவே.

ஏற்கனவே வெளியான படைப்புகள் ஏற்கப் பட மாட்டாது.

மே 8 மற்றும் அதற்குப் பின் எழுதப் பட்ட விமர்சனக் கட்டுரைகளாக இருக்க வேண்டும்.

ஒருவர் எத்தனை படைப்புகள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.

பரிசு ஒருவருக்கு ஒன்று மட்டுமே வழங்கப் படும்

போட்டியின் விதிகளை மாற்றி அமைக்கவோ புதிய விதிகளை ஏற்படுத்தவோ உள்ள அதிகாரத்தை சற்றுமுன் தக்கவைத்துக் கொள்கிறது.

ஆயிரம் பதிவுகள் கண்ட அபூர்வக் குழு

ஆனா நிக்கோல் ஸ்மித்துக்கும் சற்றுமுன் குழுவுக்கும் சம்பந்தம் உண்டென்றால் நம்ப இயலுமா?

ஆனா நிக்கோல் ஸ்மித்தின் மரணம் CNNன் Breaking News சேவை வழியாக எனக்கு மின்னஞ்சலில் வந்தபோதுதான் சுடச்ச்சுட உடைபடும் செய்திகளைத் தர ஒரு பதிவை உருவாக்கும் எண்ணம் தோன்றியது. எப்போதும் திரட்டிகளையே பார்த்துக்கொண்டிருக்கும் பதிவர்களுக்கு அவை மூலமே செய்திகளை எடுத்துச் செல்வது சிறந்த சேவையாகத் தோன்றியது.

அன்று மாலையே பாஸ்டன் பாலாவுடன் தொலைபேசினேன். அப்புறம் எல்லாம் உங்களுக்குத் தெரிந்த கதைதான்.

சற்றுமுன் குழுவுக்கு கிடைத்த முதல் வெற்றி அந்தக் குழு அமைந்ததுதான். அனுபவம் மிக்க, செய்திகளை படிப்பதிலும் பகிர்வதிலும் ஆர்வம் கொண்ட பதிவர்கள் குழுவின் உறுப்பினர்களானதுதான் சற்றுமுன்னுக்கு கிடைத்த முதல் வெற்றி. அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டும்.

1000 பதிவுகளில் சிங்கப்பூரில் உணரப்பட்ட நில நடுக்கத்தை கோவி. கண்ணன் சிவபாலனுக்கு தெரிவிக்க மற்ற ஊடகங்களில் செய்தி ஏதும் வ்வரும் முன்னரே சற்றுமுன்னில் வந்த பதிவு ஒரு முக்கிய பதிவாக அமைந்தது எனச் சொல்லலாம். இதுதான் சற்றுமுன்னின் முக்கிய நொக்கம். உலகெங்குமுள்ள பதிவர்கள்மூலம் செய்திகளை சேகரித்து வெளியிடுவது. ஒரு மாபெரும் சேவையை நம்மால் இதன்மூலம் உருவாக்க இயலும்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின்போது நடந்த பின்னூட்ட உரையாடல்கள் இன்னுமொரு குறிப்பிடத் தகுந்த நிகழ்வு.

வெறும் சற்றுமுன் வந்த செய்திகளுக்கென்ற தளம் ஒரு செய்தி சேவையாகவே செயல்பட்டு வருகிறது. இந்த உருமாற்றமும் சற்றுமுன்னின் உறுப்பினர்களாலேயே சாத்தியமானது.

இன்று ஆயிரம் பதிவுகளைத் தாண்டி சிறப்பாக செயல்படுகிறது என்பதில் மிக்க மகிழ்ச்சி. தினம் குறைந்தபட்சம் 500 முதல் 600 பக்கங்கள் வரை பார்வையிடப் படுகின்றன(Total hits).

பின்னூட்டங்களே அதிகம் இல்லாமல் இத்தனை பதிவுகளைத் தந்தது எப்படி என சென்னை சந்திப்பின்போது பலரும் கேட்டனர். அது சற்றுமுன் குழுவின் உறுப்பினர்களின் மனப்பாங்கையே காண்பிக்கிறது.

வரும் நாட்களில் இன்னும் சிறப்பாக செயல்பட சற்றுமுன் குழுவை ஊக்குவியுங்கள். செய்திகளைப் படிப்பதோடு நிற்காமல் அவற்றின் மீதான விமர்சனங்களை பின்னூட்டுங்கள். விவாதங்களை உருவாக்கி பயன்படுத்துங்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் பகுதியில் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் தெரிவிக்க முயலுங்கள்.

சற்றுமுன் 1000 போட்டி அறிவிப்பை படித்துவிட்டீர்களா? இதில் பங்களித்து சிறப்பியுங்கள்.

பதிவர்கள் ஒன்றாய் செயல்படுவது அரிதாய் தோன்றலாம் ஆனால் அடுத்த நிலைக்கு நாம் செல்ல வேறு எதுவும் வழி இருப்பதாய் தெரியவில்லை. புதிய முயற்சிகளை செய்துகொண்டே இருப்போம்.

பதிவுகள் பொது ஊடகத்துடன் கலக்கும் நாட்கள் வெகுதொலைவில் இல்லை. சற்றுமுன் போன்ற குழுத் தளங்களும் குழுக்களும் இதை துரிதப்படுத்துகின்றன என்றே சொல்வேன்.

உங்கள் ஆர்வத்திற்கும், ஆதரவுக்கும் நன்றி.
சற்றுமுன் குறித்த விமர்சனங்களை satrumun@gmail.com எனும் முகவரிக்கு அனுப்புங்கள். அல்லது பின்னூட்டங்களில் தாருங்கள்.

அன்புடன்,
சிறில் அலெக்ஸ்

சற்றுமுன்-1000

2007 பிப்ரவரி 15 ம் நாள் சிறில் அலெக்ஸ் முயற்சியில் பாஸ்டன் பாலா ஆலோசனையுடன் சற்றுமுன் என்ற சூடானசெய்திகளைத் தரும் வலைப்பூ ஆரம்பிக்கப் பட்டது.

சூடான தலைப்புச் செய்திகளை தருவதற்கென்று உருவாக்கப் பட்ட இந்த தளத்தில் வெகு விரைவில் 20 உறுப்பினர்கள் பல்வேறு கண்டங்களில் இருந்து தன்னார்வ செய்தியாளர்களாக இணைந்து வலிமையான கூட்டுப் பதிவாக உருவாக்கி உலகத்தின் செய்திகளை சுடச்சுடத் தந்து பலருக்கு செய்தி என்றாலே சற்றுமுன் என்ற நிலையை வெகு விரைவாக அடைய உதவினார்கள்.

சற்றுமுன் உருவாகி சரியாக 83 ஆவது நாள் மே 8 அன்று 1000ஆவது பதிவு இடுகை இடப்பட்டு மாபெரும் சாதனைக்குரிய பதிவாக மாறிவிட்டது. சற்றுமுன்னின் இந்த தொடரும் பயணத்தில் 1000ஆவது பதிவு நினைவுக் கொண்டாட்டமாக மாபெரும் விமர்சனப் போட்டி ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளது. வலைப்பதிவர்களும் வலைப்பதிவுக்கு வெளியே இணையத்தில் பங்களிப்பவர்களும் பங்கேற்கும் வகையில் இந்த மாபெரும் செய்தி விமர்சனப் போட்டி தீர்மானிக்கப் பட்டுள்ளது.

சற்றுமுன்னின் இந்த தொடரும் பயணத்தில் சிறில் அலெக்ஸ் தளநிர்வாகியாக சிறப்புற ஒருங்கிணைக்கிறார். தள வடிவமைப்பை சிந்தாநதி கவனித்துக் கொள்ள உலகெங்கிலும் இருந்து இணைந்துள்ள சக வலைப்பதிவர்களான பாஸ்டன் பாலா, சிவபாலன், மணியன், கவிதா, அதிரை புதியவன், மணிகண்டன், ரவிசங்கர், முத்துகுமரன், கோவி.கண்ணன், பாலபாரதி, ஆசிப் மீரான், பொன்ஸ், பெருசு, ராதா ஸ்ரீராம், துளசிகோபால், விக்கி, திரு ஆகியோர் செய்திகளை ஒருங்கிணைக்கின்றனர்.

இத்தனைப் பேரின் கூட்டு முயற்சியில் கூட்டுறவில் உருவாகி வளர்ந்துள்ள இந்த செய்தித் தளம் இன்னும் பல சிறப்புக்களை பெற்று மேலும் முன்னேறும் என்ற நம்பிக்கையோடு சற்றுமுன் நடத்தும் போட்டிகளின் ஒருங்கிணைப்புக்காக இந்த சற்றுமுன்1000 வலைப்பதிவு வெளியிடப் படுகிறது.