83 நாட்களில் 1000 பதிவுகள்!

Wednesday, May 9, 2007

ஆயிரம் பதிவுகள் கண்ட அபூர்வக் குழு

ஆனா நிக்கோல் ஸ்மித்துக்கும் சற்றுமுன் குழுவுக்கும் சம்பந்தம் உண்டென்றால் நம்ப இயலுமா?

ஆனா நிக்கோல் ஸ்மித்தின் மரணம் CNNன் Breaking News சேவை வழியாக எனக்கு மின்னஞ்சலில் வந்தபோதுதான் சுடச்ச்சுட உடைபடும் செய்திகளைத் தர ஒரு பதிவை உருவாக்கும் எண்ணம் தோன்றியது. எப்போதும் திரட்டிகளையே பார்த்துக்கொண்டிருக்கும் பதிவர்களுக்கு அவை மூலமே செய்திகளை எடுத்துச் செல்வது சிறந்த சேவையாகத் தோன்றியது.

அன்று மாலையே பாஸ்டன் பாலாவுடன் தொலைபேசினேன். அப்புறம் எல்லாம் உங்களுக்குத் தெரிந்த கதைதான்.

சற்றுமுன் குழுவுக்கு கிடைத்த முதல் வெற்றி அந்தக் குழு அமைந்ததுதான். அனுபவம் மிக்க, செய்திகளை படிப்பதிலும் பகிர்வதிலும் ஆர்வம் கொண்ட பதிவர்கள் குழுவின் உறுப்பினர்களானதுதான் சற்றுமுன்னுக்கு கிடைத்த முதல் வெற்றி. அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டும்.

1000 பதிவுகளில் சிங்கப்பூரில் உணரப்பட்ட நில நடுக்கத்தை கோவி. கண்ணன் சிவபாலனுக்கு தெரிவிக்க மற்ற ஊடகங்களில் செய்தி ஏதும் வ்வரும் முன்னரே சற்றுமுன்னில் வந்த பதிவு ஒரு முக்கிய பதிவாக அமைந்தது எனச் சொல்லலாம். இதுதான் சற்றுமுன்னின் முக்கிய நொக்கம். உலகெங்குமுள்ள பதிவர்கள்மூலம் செய்திகளை சேகரித்து வெளியிடுவது. ஒரு மாபெரும் சேவையை நம்மால் இதன்மூலம் உருவாக்க இயலும்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின்போது நடந்த பின்னூட்ட உரையாடல்கள் இன்னுமொரு குறிப்பிடத் தகுந்த நிகழ்வு.

வெறும் சற்றுமுன் வந்த செய்திகளுக்கென்ற தளம் ஒரு செய்தி சேவையாகவே செயல்பட்டு வருகிறது. இந்த உருமாற்றமும் சற்றுமுன்னின் உறுப்பினர்களாலேயே சாத்தியமானது.

இன்று ஆயிரம் பதிவுகளைத் தாண்டி சிறப்பாக செயல்படுகிறது என்பதில் மிக்க மகிழ்ச்சி. தினம் குறைந்தபட்சம் 500 முதல் 600 பக்கங்கள் வரை பார்வையிடப் படுகின்றன(Total hits).

பின்னூட்டங்களே அதிகம் இல்லாமல் இத்தனை பதிவுகளைத் தந்தது எப்படி என சென்னை சந்திப்பின்போது பலரும் கேட்டனர். அது சற்றுமுன் குழுவின் உறுப்பினர்களின் மனப்பாங்கையே காண்பிக்கிறது.

வரும் நாட்களில் இன்னும் சிறப்பாக செயல்பட சற்றுமுன் குழுவை ஊக்குவியுங்கள். செய்திகளைப் படிப்பதோடு நிற்காமல் அவற்றின் மீதான விமர்சனங்களை பின்னூட்டுங்கள். விவாதங்களை உருவாக்கி பயன்படுத்துங்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் பகுதியில் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் தெரிவிக்க முயலுங்கள்.

சற்றுமுன் 1000 போட்டி அறிவிப்பை படித்துவிட்டீர்களா? இதில் பங்களித்து சிறப்பியுங்கள்.

பதிவர்கள் ஒன்றாய் செயல்படுவது அரிதாய் தோன்றலாம் ஆனால் அடுத்த நிலைக்கு நாம் செல்ல வேறு எதுவும் வழி இருப்பதாய் தெரியவில்லை. புதிய முயற்சிகளை செய்துகொண்டே இருப்போம்.

பதிவுகள் பொது ஊடகத்துடன் கலக்கும் நாட்கள் வெகுதொலைவில் இல்லை. சற்றுமுன் போன்ற குழுத் தளங்களும் குழுக்களும் இதை துரிதப்படுத்துகின்றன என்றே சொல்வேன்.

உங்கள் ஆர்வத்திற்கும், ஆதரவுக்கும் நன்றி.
சற்றுமுன் குறித்த விமர்சனங்களை satrumun@gmail.com எனும் முகவரிக்கு அனுப்புங்கள். அல்லது பின்னூட்டங்களில் தாருங்கள்.

அன்புடன்,
சிறில் அலெக்ஸ்

No comments: