2007-05-15
இன்னும் எட்டு ஆண்டுகளில் வெண்வெளிக்கு மனிதனை அனுப்ப போவதாக மே 9-ஆவது தேதியன்று இந்திய விண்வெளி கழகத்திடமிருந்து வந்த செய்தி இந்திய வெண்வெளி ஆர்வலரிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த செய்தி நமது "சற்றுமுன்"வலைத்தளத்திலும் இடம் பெற்றது.
இந்திய வெண்வெளி கழகம் என்பது இந்தியர்கள் உலக அளவில் பெருமை பட்டுக்கொள்ளக்கூடிய விஞ்ஞான சாதனைகளில் ஒன்று என்றால் அதை மறுப்பதற்கில்லை. மோசமான பொருளாதார நிலைமையிலும் ஆர்வம் மற்றும் கடும் உழைப்பை மட்டுமே நம்பி நம் விஞ்ஞானிகள் இந்த அளவுக்கு இயங்கிக்கொண்டு இருப்பதே பாராட்டுக்குறிய விஷயம் தான். செயற்கை கோள்களை வேற்று நாடுகளுக்கு அனுப்பி அங்கிருந்து ஏவுவதில் இருந்து சுயமாக பி.எஸ்.எல்.வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி ரக ஏவுகளங்களை ஏவுவது வரை வளர்ந்துவிட்ட நமது விண்வெளிக்கழகத்தின் வளர்ச்சி பெரிமிதத்திற்குறியது . இன்னிலையில் விண்வெளிக்கழகத்தின் இந்த அறிவிப்பையும் அதன் காரண காரியங்களை பற்றியும் சற்றே இந்த பதிவில் பார்ப்போம்.
விண்வெளிக்கு மனிதனை இது வரை மூன்று நாடுகள் மட்டுமே அனுப்பி வைத்திருக்கின்றன. முதன் முதலில் 1961-ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி அன்று ரஷ்யா மனிதனை விண்வெளிக்கு அனுப்பியது. பனிப்போர் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த அந்த காலக்கட்டத்தில் அமெரிக்காவும் ரஷ்யாவும் எல்லா துறைகளிலும் நேரடியாகவே போட்டி போட்டுக்கொண்டன. இதன் ஒரு பகுதியாக விண்வெளிக்கு மனிதனை முதலில் அனுப்புவது யார் என்ற போட்டியில் ரஷ்யா வெற்றி பெற்றது. ரஷ்யாவின் இந்த சாதனை முடிந்த 23 நாட்களிலேயே அமெரிக்கா தனது நாட்டவரை விண்வெளிக்கு அனுப்பி தாங்களும் விண்வெளிப்போரில் ஒன்றும் சோடை போகவில்லை என்று காட்டிக்கொண்டது. இருந்தாலும் ரஷ்யாவை வெண்வெளிக்கு முதன்முதலில் போக விட்டது அமெரிக்காவுக்கு ஒரு பெரும் அவமானமாக கருதப்பட்டது.இதனால் தான் 1969-இல் நிலவுக்கு மனிதனை அனுப்பி அது தன் அவமானத்திற்காக பழி தீர்த்துக்கொண்டது. அதன் பின் பல ஆண்டுகளாக எந்த நாடும் விண்வெளிக்கு மனிதனை அனுப்பவில்லை. ஆனால் அமெரிக்காவும் ரஷ்யாவும் மாற்றி மாற்றி விண்வெளிக்கு பல களங்களை அனுப்பிக்கொண்டுதான் இருந்தது. அதில் அவர்கள் நாட்டு வீரர்களை தவிர மற்ற நாட்டு வீரர்களையும் பயிற்சிக்காக ஏற்றி கொண்டு சென்றன. இதன் ஒரு பகுதியாகத்தான் இந்தியாவை சேர்ந்த ராகேஷ் சர்மா 1984ஆம் வருடம் Soyuz T-11 விண்களம் மூலமாக விண்வெளிக்கு பயனப்பட்டார். அதன் பிறகு மூன்றாவதாக 2003ஆம் வருடம் யாங் லிவெய் (Yang Liwei) என்பவரை சீனா வெண்வெளிக்கு அனுப்பியது.
சீனாவின் இந்த செயலினால் தான் இந்தியாவிற்கும் மனிதனை வெண்வெளிக்கு அனுப்பும் ஆசை தொற்றிக்கொண்டுள்ளது என கொள்ளலாம்.
1950 1960-களில் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் நடந்த பனிப்போரை போன்று இன்று ஆசிய நிலப்பரப்பில் இந்தியா சீனா ஆகிய இரண்டு நாடுகளுக்கு இடையில் பல துறைகளில் போட்டா போட்டி இருந்து வருவது தெரிந்த விஷயம் தான். இந்த போட்டியில் வெற்றிபெருவதற்கான முயற்சி என்பதை தவிர இந்த விஷயத்தினால் வேறு என்ன பயன்கள் இருக்க முடியும் என கொஞ்சம் பார்க்கலாம்.
உலக அரங்கில் விண்வெளித்துறையில் இந்தியா என்ற பெயர் எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் கூட அது செயற்கைகோள் அனுப்புவதோடு நின்று விடுகிறது. சமீபத்தில் உலக நாடுகள் அனைத்தும் சேர்ந்து சர்வதேச விண்வெளி மையம் (International space station) அமைக்க ஆயுத்தங்கள் நடைபெற்ற போது இதில் இந்தியாவின் பங்களிப்பு ஒன்றுமே இல்லாதது ஏமாற்றம் அளிக்க கூடிய விஷயம். உலக அரங்கில் வெண்வெளித்துறையில் இந்தியாவை ஒரு பெறும் சக்தியாக யாரும் எடுத்துக்கொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது. இதை மாற்றி உலக அளவில் மனித இனம் விண்வெளியில் செய்யும் ஆராய்ச்சிகளில் பங்கு கொள்ள இந்த முயற்சி பெரும் பங்கு வகிக்கும்.
விண்வெளிக்கு மனிதனை அனுப்புவதால் இதை போன்ற அரசியல் சார்ந்த விஷயங்களை தவிர விஞ்ஞான ரீதியாக வேறு என்ன பயன் என்று பார்க்கலாமா??
சந்திர மண்டலத்தில் ஆய்வு என்பது அமெரிக்கா போன்ற நாடுகள் பெரும் உற்சாகத்துடன் ஈடுபடும் ஆராய்ச்சி தலைப்பு. சந்திர மண்டலத்தில் கிடைக்கும் கற்கள்,பாறைகள் போன்றவை வைத்து நம் சூரிய குடும்பத்தை பற்றியும் அண்டத்தின் உருவாக்கத்தை பற்றியும் பல விஷயங்களை அறியும் முயற்சி நடை பெற்று வருகிறது. இது தவிர செவ்வாய் கிரகத்துக்கு செல்வதற்கான முயற்சிகளிலும் உலக நாடுகள் ஆர்வமாக உள்ளன. இந்த முயற்சிகளில் நிலவை ஒரு நடுநிலை ஏவு மையமாக உபயோகித்துக்கொள்வதின் பங்கு இன்றியமையாதது. இதையும் தவிர நிலவை, ஆராய்ச்சி மையம் அமைத்துக்கொள்வதற்கோ அல்லது வருங்காலத்தில் குடி பெயர்ந்து செல்லவும் உபயோகித்துக்கொள்ளலாம் என்ற கருத்துக்களும் உண்டு.
நிலவில் விலை மதிப்பற்ற கணிமங்கள் பல புதைந்திருப்பதாகவும் இதை எல்லாம் வருங்காலத்தில் மனிதன் உபயோகிக்க போட்டா போட்டி நிலவலாம் என்று கூறப்படுகிறது. இதையும் தவிர நிலவில் இருந்து சூரிய ஒளியை தேக்கி எரிபொருளாகவும் உபயோகித்துக்கொள்ளலாம். இப்படி பலவிதங்களிலும் நிலவில் மனிதன் செய்வதற்கு ஆராய்ச்சிகள் கொட்டிக்கிடக்கின்றன.
இவையெல்லாவற்றிற்கும் விண்வெளியில் மனிதன் வாழ்ந்து பயிற்சி பெறுவது இன்றியமையாதது. நிலவையும் செவ்வாய் கிரகத்தையும் தாண்டி விண்வெளியில் பல தரப்பட்ட ஆராய்ச்சிகளை செயவதற்கும் விண்வெளியில் மனிதனில் இருப்பு அவசியம். இப்பொழுதெல்லாம் இயந்திர மனிதர்கள் எவ்வளவு முன்னேறி இருந்தாலும் சாதாரணமாக ஒரு ஸ்க்ரூவை முடிக்கிவிட தர வேண்டிய கட்டளைகளை தருவதற்குள் ஒரு மனிதன் அதே செயலை சத்தமே இல்லமல் திறம்பட செய்து முடிப்பான். அதையும் தவிர வெண்வெளியில் அதிமாக முடிவெடுக்க வேண்டிய விஷயங்கள் அடங்கிய ஆராய்ச்சிகள் நடத்தும் போது அங்கே மனிதனின் இருப்பு அவசியமாகி விடுகிறது.
இந்தியா போன்ற ஏழை நாட்டில் இவ்வளவு செலவு செய்து இவ்வளவு பெரிய ஆராய்ச்சிகள் எல்லாம் தேவையா என்று கேள்விகள் எழுந்தாலும்,நாட்டின் முழுமையான வளர்ச்சிக்கும்,உலக அளவில் வல்லரசாக இந்தியா முன்னேறும் முயற்சிக்கு இது போன்ற விஷயங்கள் தேவை என்றே தோன்றுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment